இருதரப்பு மோதலில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கில் ஆஜராகாத காவல் ஆய்வளாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் எம்.புளியங்குளத்தில் உள்ள கோயிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக 2018-இல் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது, கோயிலில் உள்ள சாமி சிலை சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக வில்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் 10 முறை விசாரணைக்கு வந்துள்ளது. இதில், சம்பவத்தின்போது வில்லூர் காவல் ஆய்வாளராக இருந்த குருவெங்கட்ராஜ் ( தற்போது தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் பணியாற்றுகிறார்) ஒரு முறை கூட ஆஜராகவில்லை.
அவர் ஆஜராகி சாட்சியம் அளிக்காததால் விசாரணை நடத்த முடியாமல் தள்ளி வைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி நசீமா பானு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த முறையும் காவல் ஆய்வாளர் குருவெங்கட்ராஜ் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.