மதுரையில் தற்கொலைக்கு முயன்ற மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் மாடியிலிருந்து தவறிவிழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். மனைவி பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை கோ. புதூரை அடுத்த மருதங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (45). லாரி ஓட்டுநரான இவரது மனைவி கவிதா(37). கவிதா தனது வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் கடன் கொடுத்து வாங்கி வந்துள்ளார். இந்நிலையில், கடன் பெற்றவர்களில் சிலர், கடனை திரும்பத் தராமல் ஏமாற்றியுள்ளனர்.
இதனால் கணவர், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்,
மனமுடைந்த கவிதா வீட்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை யுவராஜ் காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் இருவரும் மாடியிலிருந்து கீழே விழுந்தனர். இதில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே யுவராஜ் உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த கவிதாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த கோ.புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.