மதுரையில் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற முதியவரிடம்
ரூ. 1 லட்சம் திருடிய புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண்ணை, போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மதுரை செல்லூர் தாகூர் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (72). இவர், கோரிப்பாளையத்தில் உள்ள தேசிய வங்கிக் கிளையின் ஏ.டி.எம். மையத்தில் வெள்ளிக்கிழமை பணம் எடுக்கச் சென்றுள்ளார். இவருக்கு ஏ.டி.எம். அட்டையை முழுமையாக பயன்படுத்தத் தெரியாது என்பதால், அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் பணம் எடுத்து தரும்படி கூறியுள்ளார்.
உடனே அந்தப் பெண், மாரிமுத்துவிடம் ஏ.டி.எம். அட்டையின் ரகசிய எண்ணை கேட்டு தெரிந்துகொண்டு, தன்னிடமிருந்த செயல்படாத ஏ.டி.எம். அட்டை ஒன்றை இயந்திரத்தில் செருகியுள்ளார். ஆனால், வங்கிக் கணக்கில் பணமில்லை என
இயந்திரத்தின் திரையில் காண்பித்துள்ளது.
இதை, மாரிமுத்துவிடம் காண்பித்த அப்பெண், உங்கள் கணக்கில் பணமில்லை எனக் காட்டுவதாகவும், வங்கியை தொடர்பு கொள்ளுமாறும் கூறியுள்ளார். அதையடுத்து, செயல்படாத அந்த ஏ.டி.எம். அட்டையை எடுத்துக்கொண்டு முதியவர் வங்கிக்குச் சென்றுள்ளார். சிறிது தொலைவு சென்றதுமே, இவரது செல்லிடப்பேசிக்கு வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
உடனே, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாரிமுத்து, திலகர் திடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, ஏ.டி.எம். மையத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர்.
அதில், இந்த திருட்டில் ஈடுபட்டது புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமு என்பவரின் மனைவி சீதாலட்சுமி (40) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திலகர் திடல் போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.