சென்னை ஐஐடி சார்பில், மதுரையில் பள்ளி மாணவர்களுக்கான விநாடி-வினா போட்டி ஜூலை 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
சென்னை ஐஐடி சார்பில், கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கான விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 5 நகரங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டு, முதலாவதாக சேலத்தில் நிறைவு பெற்றுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.
மதுரையில் ஜூலை 20-ஆம் தேதி நரிமேடு கேந்திரிய வித்யாலயாவில் நடைபெறும் இப்போட்டியில், 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களில் இருவர் ஒரு குழுவாகப் பங்கேற்கலாம். குழுவில் இடம்பெறும் மாணவர்கள், ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், பொது அறிவு, பகுத்தறிதல் ஆகிய பிரிவுகளில் விநாடி-வினாவில் கேள்விகள் கேட்கப்படும்.
பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் ள்ல்ஹழ்ந்.ள்ட்ஹஹள்ற்ழ்ஹ.ர்ழ்ஞ் என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். காலை 10 மணிக்கு போட்டி நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு போட் டி முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதைத் தொடர்ந்து, முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். அதேபோல், இப்போட்டியில் முதல் 5 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சென்னையில் நடைபெறும் 2-ஆம் சுற்று போட்டியில் பங்கேற்கலாம். ஒவ்வொரு நகரங்களிலிருந்தும் தேர்வு செய்யப்படும் 25 அணிகள் பங்கேற்கும் போட்டியில், முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் தேசிய அளவிலான போட்டிக்குப் பரிந்துரைக்கப்படுவர்.