ரயில் நிலைய மேற்கு நுழைவுவாயிலில் வாகனங்கள் ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி
மதுரை ரயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயிலை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
மதுரை மேற்கு நுழைவுவாயில் பகுதியில் 3 அடுக்கு வாகன நிறுத்துமிடம் இருந்தும் போதிய இடவசதியின்றி இரு சக்கர வாகனங்கள் நுழைவுவாயில் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால், ஆட்டோ, கார்கள் கூட அவ்வழியே சென்றுவர சிரமப்படும் நிலை உள்ளது.
ரயில் நிலையத்தின் கிழக்கு நுழைவுவாயில் பகுதி அழகுபடுத்தப்பட்டு, ஆட்டோக்கள், கார்கள் செல்லவும், நகரப் பேருந்துகள் வந்து செல்லவும் பாதை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மேற்கு நுழைவுவாயில் பகுதியில் கழிப்பறை, குடிநீர் வசதியுடன் அழகுபடுத்தி, இரு சக்கர வாகன நிறுத்தம் மற்றும் ஆட்டோ நிறுத்தத்தை முறைப்படுத்த வேண்டும் என, ரயில் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஒருவர் கூறியது: பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, அழகுபடுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மேற்கு நுழைவுவாயில் பகுதியை ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்வதே இல்லை. போதிய இடவசதியுடன் வாகன நிறுத்துமிடம் இல்லாததால், அங்கு வாகனங்கள் நிறுத்த முடியாமல், நுழைவுவாயில் பகுதியை மறைத்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
ரயில்வே நிலையத்துக்கு அருகேயுள்ள ரயில்வே துறைக்குச் சொந்தமான இடங்களை தனியாருக்கு தாரைவார்க்காமல், கூடுதலாக வாகன நிறுத்தம் அமைப்பது போன்ற தேவைகளுக்கு பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.