மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மருதங்குடி ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கிராமத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
கள்ளிக்குடி வட்டம் மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தங்களது கிராமத்தின் குடிநீர்ப் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன் விவரம்:
மருதங்குடி ஊராட்சியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க உரிய கட்டணத்துக்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வீடுகளிலும் உள்ள மேல்நிலைத் தொட்டியில் ஊராட்சி நிர்வாகத்தினர் தண்ணீர் ஏற்றித் தருகின்றனர்.
குடிநீர்த் தொட்டிகள் பராமரிப்புக்கு பணியாளர்கள் இருவர் இருந்தபோதும், தனி நபர்கள் மூலம் தொட்டிகளை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், தண்ணீர் எடுக்கச் செல்பவர்களிடம் பணம் கொடுத்தால் தான் அனுமதிப்போம் எனக் கூறி வருகின்றனர்.
இதனால், மருதங்குடி ஊராட்சியில் உள்ள தெருக் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.