மதுரை மாநகராட்சியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி புதன்கிழமை உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு துணை ஆணையர் ப.குமரேஸ்வரன் தலைமை வகித்தார். இதில், மாநகராட்சி பணியாளர்கள் பங்கேற்று, இந்திய அரசியலமைப்புச்சட்ட விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் உரிமை என்பதால், 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டோம். குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவோம். தமிழகத்தை குழந்தைத்தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக மாற்ற பாடுபடுவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதேபோல மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களிலும் உதவி ஆணையர்கள் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.