வலையங்குளம் அங்கன்வாடி பணியாளர் நியமனம் செல்லாது என உத்தரவிடக்கோரும் வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த சம்சாத் பீவி தாக்கல் செய்த மனு:
கடந்த 2017 ஆம் ஆண்டு வலையங்குளம் அங்கன்வாடி பணியாளருக்காக விண்ணப்பித்திருந்தேன். காலிப்பணியிடம் உள்ள அங்கன்வாடியில் அதே கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
ஆனால் பெருங்குடியைச் சேர்ந்த பல்கிஸ் பர்வீன் என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் பணி நியமன ஆணை வழங்கியுள்ளார்.
கடந்த ஜூன் 4 ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கான பணி நியமனத்தை இணைய தளத்தில் வெளியிடவில்லை. இது சட்டத்திற்கு புறம்பானது. எனவே வலையங்குளம் அங்கன்வாடி பணியாளரை மாவட்ட ஆட்சியர் நியமனம் செய்தது செல்லாது என உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த மனு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.