மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு தொடர்பாக மத்திய அரசுடன் செய்துள்ள ஒப்பந்த ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு எலியார்பத்தி சுங்கச்சாவடிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அருப்புக்கோட்டை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகி மகாலிங்கம் தாக்கல் செய்த மனு: மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை முறையாகப் பராமரிக்காததால், குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. பராமரிப்பு இல்லாத இந்த சாலையில் இயக்கப்படும் பேருந்துகள் அடிக்கடி பழுதாகின்றன.
மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வரை சேதமடைந்துள்ள சாலையை முழுமையாகச் சீரமைக்கும் வரை எலியார்பத்தியில் உள்ள சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மேற்படி சாலையைச் சீரமைக்கும் வரை எலியார்பத்தி சுங்கச்சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணத்தில் 30 சதவீதம் விலக்கு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மதுரை - தூத்துக்குடி வழித்தடத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகத் தார்ச்சாலை அமைக்கப்படும் என்று மத்திய அரசும் சுங்கச்சாவடி நிறுவனமும் செய்துள்ள ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை சுங்கச்சாவடி நிறுவனம் கடைபிடிக்கவில்லை என்றார்.
அதையடுத்து, மத்திய அரசுடன் செய்துள்ள ஒப்பந்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய சுங்கச் சாவடி நிறுவனத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.