மதுரையில் வியாழக்கிழமை தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலைஅழகுபுரம் மகாலட்சுமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகேஷ்(26). இவர் வியாழக்கிழமை பகலில் பழங்காநத்தம்-டிவிஎஸ் ரயில்வே கடவுப்பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் பலத்த காயமடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக தகவலின்பேரில் மதுரை ரயில்வே போலீஸார், முகேசின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.