மதுரை மாநகராட்சி பகுதிகளில் 100 கிலோ குப்பைகளுக்கு மேல் உருவாகும் பட்சத்தில் அவரவர் இடத்திலேயே தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் அதிகளவில் குப்பைகளை மறுசுழற்சி செய்வது மற்றும் மட்க வைப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் ஆணையர் ச.விசாகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆணையர் பேசியது: மதுரை மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்வது தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 650 டன் முதல் 700 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு உரமாக தயாரிக்கப்படுகிறது. 100 கிலோவிற்கு மேல் குப்பைகளை உருவாக்கும் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், குடியிருப்பு வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் ஆகியன குப்பைகளை அவரவர் இடத்திலேயே தரம் பிரித்து அறிவியல் முறைப்படி உரமாகவும், உயிரி எரிவாயு(பயோகேஸ்) உற்பத்தி செய்ய வேண்டும். உணவகத்தின் உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க, பாத்திரங்கள் மற்றும் துணிப்பை கொண்டு வருபவர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வைகையாற்றின் இரு கரைகள் மற்றும் 13 வாய்க்கால்களை தூய்மையாக பராமரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சிந்தாமணி வாய்க்காலில் குப்பைகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் இன்னும் சில மாதங்களில் பேட்டரி வாகனங்கள் மூலம் வீடு, வீடாக நேரடியாக குப்பைகளை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
கூட்டத்தில் நகர்நல அலுவலர் (பொறுப்பு) சரோஜா, சுகாதார அலுவலர்கள் விஜயகுமார், சிவசுப்பிரமணியன், ராஜ் கண்ணன் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.