மதுரையில் பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை நரிமேடு தாமரை வீதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(45). தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு திங்கள்கிழமை வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருள்கள் வீடு முழுவதும் சிதறிக் கிடந்தன.
இதுகுறித்து கார்த்திகேயன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.15,500 ரொக்கம் ஆகியன திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கார்த்திகேயன்அளித்த புகாரின் பேரில் கரிமேடு போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில், மதுரை சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை(67). இவர் கோகலே சாலையில் மருத்துவ ஆய்வகம் நடத்தி வருகிறார். சின்னத்துரை திங்கள்கிழமை காலையில் வழக்கம் போல் ஆய்வகத்தை திறக்க முயன்ற போது, பூட்டு உடைக்கப்பட்டு ஆய்வகத்திலிருந்த ரூ.42 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சின்னத்துரை அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.