திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் "எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பதற்கான நில மாற்றத்திற்கான ஆவணங்களை வருவாய் துறையினர் தமிழக அரசுக்கு அனுப்பிவைத்தனர்.
ஆஸ்டின்பட்டியை அடுத்த கோ.புதுப்பட்டியில் 224. 24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1, 264 கோடி ரூபாய் செலவில் "எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மேலும் நிதி உதவி செய்ய ஜப்பானில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன் நிதிகுழுவினர் வந்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் வருவாய் துறை சார்பில் "எய்ம்ஸ்' மருத்துவமனைக்காக தமிழக சுகாதாரத் துறை வசம் இருந்த 224.24 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்கள் மத்திய சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக ஆவணங்கள் தயாரிக்கும் பணி கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆவணங்கள் தயாரிப்பு பணிகள் நிறைவுற்று வருவாய் துறையினர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஆவணங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.