அரசு அலுவலகங்களில் இருந்து கருவூலங்களுக்கு இணைய வழியில் சம்பளப் பட்டியல் சமர்ப்பித்தல் திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை களையக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருவூலக் கணக்குத் துறையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அந்த குறைபாடுகள் நீக்கப்படும் வரை அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய நடைமுறையிலேயே சம்பளம் வழங்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், பணிப்பதிவேடு நூறு சதவீதம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக சம்பளம் வழங்கும் அலுவலர்களை நிர்பந்தம் செய்யக் கூடாது, கருவூலக் கணக்குத் துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கைகளைக் கைவிடுவது, ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டத்தை அரசு நிறுவனமான தேசிய தகவல் மையம் மூலமாகச் செயல்படுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் க.ஜெயராஜராஜேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் க.நீதிராஜா, மாநிலத் தலைவர் க.செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.