மகனுடன் தகராறில் ஈடுபட்ட மூதாட்டி மர்மச் சாவு
மதுரையில் மகனுடன் தகராறில் ஈடுபட்ட மூதாட்டி வீட்டில் வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மதுரை விசாலாட்சிபுரம் காலாங்கரையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி ராசாத்தியம்மாள்(80). இவருக்கும், இவரது மகனுக்கும் இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்தவர்கள் தகராறை விலக்கி விட்டுள்ளனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிய ராசாத்தியம்மாள் வெள்ளிக்கிழமை வெளியில் வரவில்லை. இதனால் அவரது மூத்த மகன் ராமர், வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது ராசாத்தியம்மாள் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச்சென்ற தல்லாகுளம் போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் குறித்து ராமர் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ராசாத்தியம்மாள் கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகின்றனர்.