மதுரையில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் ஒரே நாளில் 3 மாணவர்கள் விஷம் குடித்ததில் இருவர் உயிரிழந்தனர். அவர்கள் ராகிங் கொடுமையால் விஷம் குடித்தார்களா என போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை பி.பி.குளம் திருவள்ளுவர் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன்-சித்ராதேவி தம்பதியின் மகன் முத்துபாண்டி (19). இவர், தெப்பக்குளத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் முதலாமாண்டு படித்து வந்தார். சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்த முத்துபாண்டி, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சக மாணவர்கள் ராகிங் செய்ததால் விஷம் குடித்ததாக, அவரது தாயார் சித்ராதேவி தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மாணவர் முத்துபாண்டி சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறியது: உயிரிழந்த மாணவர் முத்துபாண்டி மற்றும் செல்லூரைச் சேர்ந்த பரத், அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த பாக்கியநாதன் ஆகியோர் கல்லூரி நண்பர்களாக இருந்தனர். இவர்களை, அதே கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் ராகிங் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதில், முத்துபாண்டி, பரத், பாக்கியநாதன் ஆகிய மூவரும் அவரவர் வீட்டில் கடந்த மார்ச் 1-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கியுள்ளனர். அதன்பின்னர், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இவர்களில், மாணவர் பரத் 2-ஆம் தேதியும், சனிக்கிழமை முத்துப்பாண்டியும் உயிரிழந்தனர். பாக்கியநாதன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ராகிங் செய்ததால் விஷம் குடித்தார்களா அல்லது வேறேதும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.