வினாத்தாள் அறையில் அத்துமீறி நுழைந்த ஊழியர்: முதன்மைக் கல்வி அலுவலர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பொதுத் தேர்வு வினாத்தாள் வைக்கப்பட்ட அறையில்

பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பொதுத் தேர்வு வினாத்தாள் வைக்கப்பட்ட அறையில் ஊழியர் நுழைந்த விவகாரத்தில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மாவட்டக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சண்முக நாதன் தாக்கல் செய்த மனு: பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 10, 11 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கான வினாத்தாள் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 இந்நிலையில், கடந்த மார்ச் 11-ஆம் தேதி போகலூர் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் ராமசந்திரன், அலுவலக நேரம் முடிந்த பிறகு மாவட்டக்கல்வி அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து வருகை பதிவேட்டில் சில பதிவுகளைச் செய்து, சில ஆவணங்களையும் எடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலரிடம் தெரிவித்தபோது, தனக்குத் தெரியாது என தெரிவித்து விட்டார். எனவே மாவட்டக்கல்வி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்களைக் எடுத்துச் சென்ற ராமசந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போலீஸ் பாதுகாப்பை மீறி ராமசந்திரன் உள்ளே சென்றாரா, ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டதா என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மார்ச் 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com