திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் உள்ள பஞ்சு கிடங்கில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ரூ. 50 லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து சாம்பலாகின.
தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் தனது அண்ணன் சுரேஷுடன் சேர்ந்து கப்பலூர் தொழிற் பேட்டையில் பஞ்சு கிடங்கு வைத்துள்ளார். இங்கு, பழைய பஞ்சு மறுசுழற்சி செய்யப்பட்டு, புதிதாக மாற்றப்பட்டு பல நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனத்தில் சனிக்கிழமை மாலை இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறால் தீப்பற்றியது. அதையடுத்து, பஞ்சில் பற்றிய தீயானது, ஆலை முழுவதும் மிகவேகமாகப் பரவியது. உடனே, அங்கு பணியிலிருந்த 5 பெண்களும் வெளியேறினர்.
இது குறித்து தகவலறிந்த திருமங்கலம், கள்ளிக்குடி, மதுரை திடீர்நகர், தல்லாகுளம், அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைக்க போராடினர்.
இருப்பினும், தீயணைப்பு வாகனங்களில் போதுமான தண்ணீர் இல்லாததால், இரவு 9 மணி வரை தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அதன்பின்னர், மாநகராட்சி லாரிகள் மூலமும், தனியார் லாரிகள் மூலமாகவும் கொண்டுவரப்பட்ட தண்ணீரால் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
இந்த விபத்தினால் சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து கருகியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, திருமங்கலம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.