மதுரை மாவட்டத்தில் மக்களவை பொதுத்தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுரை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மேலூர், மதுரை கிழக்கு, வடக்கு, தெற்கு, மத்தியம், மேற்கு ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள், தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகள், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகள் என மொத்தமுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்ற வேண்டும். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அனைத்து அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் தேவையான போக்குவரத்து வசதி உள்பட பல்வேறு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளது.