மே தினத்தையொட்டி தொழிலாளர்களுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் விவசாயம் தான் பெரிய தொழிலாக இருக்கிறது. விவசாயத் தொழிலாளர்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனர். வடமாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது. காவிரி நீரின்றி தமிழக விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர். நாட்டின் நலனில் அக்கறை காட்டும் நல்ல தலைவர்கள் கிடைத்து தொழிலாளர்கள் வெற்றி பெற வேண்டும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும் என மே தின நாளில் உறுதி ஏற்போம் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் ந.சேதுராமன் தெரிவித்துள்ளார்.
இன்றைய சூழலில் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாகத் தட்டிப் பறிக்கப்படுகின்றன. ஆலைகள் மூடல், உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமை, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இத்தகைய நிலையை மாற்றி, இந்தியாவை ஒளிமயமான வளர்ச்சிக்கான நாடாக மாற்றுவதற்கு இளைஞர்களும், தொழிலாளர்களும் கைகோர்த்துச் செயல்படுவது அவசியம் என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் க.ஜான்மோசஸ் தெரிவித்துள்ளார்.