மதுரையில் வெள்ளிக்கிழமை ரௌடியை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியக் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (50). இவர் மீது கொலை, கொள்ளை மற்றும் சாராயம், கஞ்சா விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை தெற்கு வாசல் பகுதியில் பால்பாண்டி நடந்து சென்றபோது, பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத 3 பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரைத் தாக்க முயன்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க பால்பாண்டி அருகில் இருந்த பழைய பொருள்கள் விற்பனைச் செய்யும் கடைகள் புகுந்துள்ளார். அந்த கும்பலும் கடைக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த பால்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தெற்கு வாசல் போலீஸார் வழக்குப்பதிவுச் செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலைச் சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.