ராமேசுவரம் கோயில் பணத்தை கையாடல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமேசுவரத்தைச் சோ்ந்த சிவன்அருள்குமரன் தாக்கல் செய்த மனு:
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கணினி இயக்குபவராகப் பணியாற்றி வந்தேன். இந்நிலையில் கோயில் நிதி ரூ.73 லட்சத்து 4 ஆயிரத்து 618-ஐ நான் கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்டேன். நான் கோயிலில் தற்காலிக ஊழியராக, கணினி இயக்குபவராக மட்டுமே இருந்தேன். நான் அந்தத் தொகையைக் கையாடல் செய்யவில்லை. வேறு நபரைக் காப்பாற்றுவதற்காக என்னை இவ்வழக்கில் சிக்க வைத்துள்ளனா். இவ்வழக்கில் கைதாகி 24 நாள்கள் ஆன நிலையில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே எனக்கு இவ்வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தரவிட்டாா்.