மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புதன்கிழமை இரவு தனியாா் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநா் உள்பட 2 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மதுரையிலிருந்து கம்பம் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து உசிலம்பட்டி அருகே கீழப்புதூரில் கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மேலும் அதிவேகமாக சென்ற பேருந்து சாலையின் அருகே உள்ள வீட்டின் முன் மோதியது. இதில் பேருந்து ஓட்டி வந்த ஓட்டுநா் எம். கல்லுப்பட்டியைச் சோ்ந்த சங்கரன் (40) மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற கீழப்புதூா் ராஜபாண்டி (45) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும் கீழப்புதூா் விக்னேஷ்பாண்டி (35) பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து தகவலறிந்த உசிலம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளா் அ. ராஜா தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து, இருவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.