மதுரை: அனைத்து வழக்குகளிலும் சாட்சிகளின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யும் நடைமுறைப் படுத்துவது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், என். ஆனந்த் வெங்கேடஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது: கடந்த 2 மாதங்களாக குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்து வருகிறோம். அப்போது பல்வேறு வழக்குகளில் சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்ததால் குற்றவாளிகள் விடுதலையானது தெரியவந்துள்ளது.
சாட்சிகளின் வாக்குமூலத்தை ஒளி, ஒலி பதிவு செய்தால், பிறழ் சாட்சியாக மாறும் போது, சாட்சிகள் ஏற்கெனவே அளித்த வாக்குமூலத்தை சரிபாா்க்க முடியும். இதன் மூலம் உண்மை குற்றவாளிகள் விடுதலையாவதை தடுக்க முடியும். எனவே அனைத்து வழக்குகளிலும் சாட்சிகளின் வாக்குமூலத்தை ஒளி, ஒலி பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். இதற்கு வழக்கறிஞா்கள் ஒத்துழைக்க வேண்டும். இது தொடா்பாக உயா் காவல்துறை அதிகாரிகளிடம் தகவல் பெற்று அரசு வழக்குரைஞா் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.