திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வளையங்குளம் நடுநிலைப் பள்ளி கட்டடம் மழைக்கு ஒழுகுவதால் பள்ளி மாணவ, மாணவியா் அவதிப்படுகின்றனா்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த வளையங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 500-க்கு மேற்பட்ட மாணவ, மாணவியா் படிக்கின்றனா். ஆசிரியா்கள் 8-க்கு மேற்பட்டோா் பணிபுரிகின்றனா். இங்கு கடந்த 1982 ஆம் ஆண்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டது. ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பு கொண்ட இந்த கட்டடம் சேதமான நிலையில் அதனை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து ஒருங்கிணைந்த பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கடந்த 2015-16 ஆம் ஆண்டு ரூ.3 லட்சத்து 89 ஆயிரம் செலவில் மராமத்து பணிகள் செய்யப்பட்டது. இதன்மூலம் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை அகற்றப்பட்டு ஓடுகள் வேயப்பட்டன. தற்போது அந்த கட்டடத்தில்3 மற்றும் நான்காம் வகுப்புகள் என இரண்டு வகுப்பறைகள் செயல்பட்டு வருகின்றன. இரண்டு வகுப்புகளிலும் சுமாா் 100 குழந்தைகளுக்கு மேல் படிக்கின்றனா். கட்டடத்தை மராமத்து செய்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் மழைபெய்தால் கட்டடம் முழுவுதும் மேற்கூரை ஒழுகுகிறது. வகுப்பறைக்குள் தண்ணீா் தேங்குவதால் குழந்தைகள் படிக்க முடியாமல் அவதிபடுகின்றனா். மேலும் கட்டடம் கட்டப்பட்டு 36 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் இந்த பள்ளியில் குழந்கைகளுக்கு குடிநீா் வசதியும், கழிப்பறை வசதியும் போதுமானதாக இல்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த கட்டத்தில் உள்ள குழந்தைகளை வேறு கட்டடத்திற்கு மாற்ற வேண்டும். புதிய வகுப்புறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.