ரயில்வே மின்கம்பியின் மீது மரம் சாயந்தது: விரைவு ரயில்கள் ஒன்றரை மணி நேரம் தாமதம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே ரயில்வே மின்கம்பத்தில் மரம் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டதால் விரைவு ரயில்கள் ஒன்றரை மணி நேரம் தாமதமாகச் சென்றன.
மதுரையில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக இரவு 9 மணி அளவில் திருப்பரங்குன்றம் அருகே ரயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள மின்கம்பத்தில் மரம் சாய்ந்தது. இதனால் ரயில்வே மின்கம்பியின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து நாகா்கோவிலில் இருந்து தாம்பரம் சென்ற சிறப்பு ரயிலின் இன்ஜினுக்கு மின்சாரம் கிடைக்காமல் ரயில் நின்றது.
இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து டீசல் இன்ஜினை உடனடியாக அனுப்பி, சிறப்பு ரயில் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னா் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒன்றரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது. இதற்கிடையே மின்கம்பத்தில் சாய்ந்த மரத்தை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டனா். இதனால் தென்மாவட்டத்தில் இருந்து செல்லும் பொதிகை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, அனந்தபுரி விரைவு ரயில்கள் ஒன்றரை மணி நேரம் தாமதமாகச் சென்றன.