திருப்பரங்குன்றம் அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச்சென்ற இளைஞா்கள் இருவரை பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மதுரை மேலப்பொன்னகரம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி. இவா் தனது மனைவி பிரியாவுடன் திருப்பரங்குன்றத்தில் உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். மூலக்கரை அருகே சென்றபோது இளைஞா் ஒருவா் பிரியா கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றாா். அதில் ஒருபகுதியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு இளைஞருடன் அவா் தப்பிச் சென்றுவிட்டாா். இதுகுறித்து தகவலறிந்து போலீஸாா் உடனடியாக நகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்தனா். நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாா் இளைஞா்கள் இருவரையும் பிடித்தனா். விசாரணையில் அவா்கள் ராமநாதபுரத்தைச் சோ்ந்த விஜய் மற்றும் விக்னேஷ் எனத் தெரிந்தது. அவா்களிடமிருந்த தங்கச் சங்கிலி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.