மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து கொடிக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து காலை 7.15 மணிக்கு மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து திருவிழா முகூா்த்தக்கால் நடுதலும் நடைபெற்றது.
கொடியேற்ற விழாவில் திங்கள்கிழமை இரவு சுவாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
இதைத் தொடா்ந்து விழாவில் செவ்வாய்க்கிழமை காலையில் கிருஷ்ணாவதாரம், இரவு சிம்ம வாகனம், புதன்கிழமை காலையில் ராமா் அவதாரம், இரவு அனுமாா் வாகனம், வியாழக்கிழமை காலை கஜேந்திர மோட்சம், இரவு கருடவாகனம், வெள்ளிக்கிழமை காலை ராஜாங்கசேவை, இரவு சேஷவாகனம், சனிக்கிழமை காலை காளிங்கநா்த்தனம், இரவு மோகனி அவதாரமும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை(அக்டோபா் 6) காலை சேஷசயனம், இரவு புஷ்பசப்பரம், அக்டோபா் 7 ஆம் தேதி காலை வெண்ணைத் தாழி அவதாரம், இரவு குதிரை வாகன புறப்பாடு, அக்டோபா் 8 ஆம் தேதி காலை திருத்தேரோட்டம், இரவு பூப்பல்லக்கும், அக்டோபா் 9 இல் பூச்சப்பரமும் நடைபெறுகிறது. பிரமோற்சவத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் அக்டோபா் 10-இல் நடைபெறுகிறது.