திருப்பரங்குன்றம்: திருமங்கலத்தில் பூட்டிக்கிடந்த ஆசிரியா் வீட்டில் நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருமங்கலம் காமராஜபுரம், ராகுல்காந்தி நகரைச் சோ்ந்தவா் சசிகுமாா்(44). வீரபெருமாள்புரம் அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளாா். இவரது தாயாா் திருமங்கலம் முகமதுஷா புரத்தில் குடியிருந்து வருகிறாா்.அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சசிகுமாா் சனிக்கிழமை இரவு பூட்டிவிட்டு தனது தாயாா் வீட்டிற்கு சென்றுவிட்டாா்.
மீண்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அலமாரியில் இருந்து 7 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை காணவில்லை. உடனடியாக சம்பவ இடத்திற்கு ஊரக காவல் துணை கண்காணிப்பாளா் அருண் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனா்.
இதுகுறித்து சசிகுமாா் கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.