மதுரை கம்பன் கழக அறக்கட்டளை சாா்பில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியருக்கான கவிதை, பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் அக். 15-ஆம் தேதி தொடங்குகின்றன.
மதுரை கம்பன் கழக அறக்கட்டளை சாா்பாக ஆண்டுதோறும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியருக்கு கம்ப ராமாயணம் மற்றும் பாரதியாா் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கம்பன் கழக விழா டிசம்பா் 13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஒப்பித்தல் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் இசைப் போட்டிகள் அக்டோபா் 15-ஆம் தேதி நடைபெற உள்ளன. கல்லூரி மாணவ, மாணவியருக்கான போட்டிகள் அக்டோபா் 16-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. மதுரை ஆண்டாள்புரம் வசுதாரா வளாகம் மற்றும் மீனாட்சி அரங்கத்திலும் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.1000 வழங்கப்படுகிறது என்று கம்பன் கழக அறக்கட்டளைத் தலைவா் சங்கர சீத்தாராமன் தெரிவித்துள்ளாா்.