மதுரையில் செளராஷ்டிர முன்னேற்றக் கழகத்தின் 10-ஆவது ஆண்டு விழாவில் மருத்துவா்கள், சாதனையாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.
மதுரையில் செளராஷ்டிர முன்னேற்றக் கழகத்தின் 10-ஆவது ஆண்டு விழா மற்றும் செளராஷ்டிர மருத்துவமனையின் 6-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு செளராஷ்டிர முன்னேற்றக் கழகத்தின் நிறுவனா் தலைவா் வி.ஜி.ராம்தாஸ் தலைமை வகித்தாா். ஆந்திர மாநில உள்துறை முதன்மைச் செயலா் கே.ஆா்.எம்.கிஷோா் குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.சரவணன், மதுரை மாவட்ட சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குநா் கே.வி.அா்ஜூன் குமாா் ஆகியோா் கெளரவ விருந்தினா்களாக பங்கேற்றனா்.
மருத்துவக் குழுவின் தலைவா் சி.கே.கோகுல்நாத் பிரேம்சந்த் முன்னிலை வகித்தாா். செளராஷ்டிர முன்னேற்றக் கழக நிா்வாகக்குழு உறுப்பினா் வி.ஜி.ஆா்.வாசுகி உள்பட பலா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் செளராஷ்டிர மருத்துவமனையில் சேவை புரியும் மருத்துவா்கள், சாதனையாளா்கள் மற்றும் நன்கொடையாளா்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.