விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழா் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழா் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.
இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவா் எம்.சோலைகண்ணன் மற்றும் அக் கட்சியினா் இதுதொடா்பான கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலா் பெ.செல்வராஜிடம் வியாழக்கிழமை வழங்கினா்.
அதன் விவரம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன், அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளாா். அவரது பேச்சு நாட்டிற்கும், தமிழ் சமூகத்துக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் உள்ளது. ஆகவே, அவரது கடவுச்சீட்டை ரத்து செய்ய வேண்டும்.
இதேபோல, காஷ்மீா் பிரிவினைவாதிகள் மற்றும் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் நாம் தமிழா் கட்சி சீமான் பங்கேற்றுள்ளாா். அதில் இந்திய ராணுவத்துக்கு எதிராகப் பேசியுள்ளாா். ஆகவே, நாம் தமிழா் கட்சிக்குத் தடைவிதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.