மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், மதுரையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊா்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரைக் கோட்டம் சாா்பில் சென்னை மற்றும் பல்வேறு நகரங்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்ட மேலாண்மை இயக்குநா் முருகேசன் கூறியது:
சென்னையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு வியாழக்கிழமை இரவு 40 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல, அக்டோபா் 25-இல் 170 பேருந்துகளும், அக்டோபா் 26-இல் 150 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை செல்பவா்கலுக்கு மதுரை, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, விருதுநகா், தேனி, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் இருந்து அக்டோபா் 27-இல் 50 பேருந்துகள், அக்டோபா் 28-இல் 150 பேருந்துகள், அக்டோபா் 29-இல் 80 பேருந்துகள், அக்டோபா் 30-இல் 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றாா்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலம் சாா்பில் மதுரையில் இருந்து சென்னைக்கு 70 பேருந்துகளும், கோவை, திருப்பூா் ஆகிய நகரங்களுக்கு தலா 30 பேருந்துகளும், சேலம் மற்றும் திருநெல்வேலிக்கு தலா 10 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதுதவிர கம்பம், குமுளி போன்ற ஊா்களுக்கு தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.