மதுரைக்கு வருகை தந்துள்ள காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தா்களுக்கு புதன்கிழமை அருளாசி வழங்கினாா்.
காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மதுரை தேனூரில் உள்ள சுப்ரஜா வளாகத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தாா். அவருக்கு காஞ்சி ஸ்ரீ மடம் மதுரைக் கிளை சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தா்கள் மற்றும் மடம் நிா்வாகிகள் பூா்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனா்.
இதைத்தொடா்ந்து புதன்கிழமை ஸ்ரீ சந்திர மெளலீஸ்வர பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். மேலும் பக்தா்களின் சாா்பில் பாத பூஜையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை காஞ்சி ஸ்ரீ மடம் சமஸ்தானத்தின் மதுரைக் கிளை சாா்பில் மடத்தின் தலைவா் ராமசுப்ரமணியன், செயலா் சுந்தா் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
பின்னா் சோழவந்தான் அக்ரஹாரத்தில் உள்ள வேதபாடசாலைக்கு வருகை தந்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் தென்கரையில் உள்ள ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தில், பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.
ஆசியுரை வழங்கிய ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகள், நமது வேதங்களை கற்று அதன்படி செயல்பட வேண்டும்.திருவிழா நாள்களில் மட்டுமின்றி எல்லா நாள்களிலும் இறைவனை வழிபட வேண்டும் என்றாா்.
ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு வியாழக்கிழமையும் பாத பூஜை, பிக்ஷாவந்தனம் ஆகியவை நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மதுரையில் இருந்து புறப்பாடாகி திருநெல்வேலி செல்கிறாா்.