மதுரையில் பொருளாதார குற்றப்பிரிவு பெண் ஊழியரின் நிலத்தை அபகரித்த 10 பேர் மீது நில அபகரிப்பு தடுப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் லதா. இவர் சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கண்ணணேந்தல், விருதூர் கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துக் கொண்டு காலி செய்யாமல் உள்ளனர்.
இதுகுறித்து லதா வருவாய்துறை மற்றும் காவல்துறையினரிடம் முறையிட்டார்.
ஆனால் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அவர்கள் நிலத்தை திரும்ப அளிக்கவில்லை.
இதையடுத்து, பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தில் லதா புகார் அளித்தார்.
ஆணையம் லதாவின் புகார் மீது நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, நில அபகரிப்பு தடுப்பு போலீஸார், லதாவின் புகார் மீது விசாரணை நடத்தி, மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்த முகமது அபுபக்கர், பாண்டி, கிருஷ்ணன், முத்துமாரி, பேச்சிமுத்து, கண்ணன் உள்ளிட்ட 10 பேர் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.