மக்கள் மனதில் முதல்வர் இடம்பிடித்தது மு.க.ஸ்டாலினுக்கு பொறுக்கவில்லை
தமிழக முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தது பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர் வெள்ளை அறிக்கை கேட்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தது: தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தால் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன் வந்துள்ளனர். தமிழகத்தில் முதலீடு செய்யலாம் என வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் வணிகம், சுற்றுலா, விவசாயம் என அனைத்து தரப்பு முதலீடுகள் குறித்தும் பார்வையிட்டோம். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் மூலம் முதல்வர் ரூ.8,300 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளார். முதல்வரின் சுற்றுப்பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டவர்கள், வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும். ஒட்டு மொத்த உலகத் தமிழர்களின் நன்மதிப்பை முதல்வர் பெற்றதை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்து எளிதில் மீண்டு விடும். தமிழகத்தில் உள்ள மனிதவளம், மின்சாரம், அரசின் நிலைத்தன்மை, சாலை வசதி மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவை காரணமாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன் வந்துள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரைவில் தமிழகம் வருகை தர உள்ளனர். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தால் தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாறும் என்றார்.