மதுரை காமராஜர் பல்கலைக் கழக மண்டல அளவிலான கல்லூரிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹாக்கி போட்டியில் 19 ஆவது ஆண்டாக செளராஷ்டிரா கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
திருநகர் அண்ணா பூங்கா மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரி அணியும், திருவேடகம் விவேகானந்தா கல்லூரி அணியும் மோதியதில் 3 - 0 என்ற கோல் கணக்கில் சரசுவதி நாராயணன் கல்லூரி அணி வெற்றி பெற்றது. பின்னர் நடைபெற்ற இறுதி போட்டியில் செளராஷ்டிரா கல்லூரி அணியும், சரசுவதி நாராயணன் கல்லூரி அணியும் மோதின. இதில் 9 - 0 என்ற கோல் கணக்கில் செளராஷ்டிரா கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. செளராஷ்டிரா கல்லூரி முதல்வர் எல்.பி.ராமலிங்கம் மாணவர்களுக்கு கோப்பையை வழங்கினார். உடற்கல்வி இயக்குநர் எஸ்.ஆர்.வி.ரவீந்திரன் முன்னிலை வகித்தார். மதுரை ஹாக்கி கிளப் அசோசியேசன் செயலர் ரமேஷ், பேராசிரியர்கள் சீனிவாசன், குபேந்திரன், ஜெயந்தி, ஜீவப்பிரியா உள்ளிடோர் வாழ்த்திப் பேசினர். மதுரை காமராஜர் பல்கலைக் கழக "பி' பிரிவு மண்டலங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 19 ஆண்டாக செளராஷ்டிரா கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.