திருப்பரங்குன்றம் நிலையூர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைகையிலிருந்து திறந்து விடப்படும் உபரிநீர் விளாச்சேரி, பாலசுப்பிரமணியன் நகர், தேவி நகர், சந்திராபாளையம் வழியாக நிலையூர் கண்மாயை அடைகிறது.
இப்பகுதிகள் நகரை ஒட்டி அமைந்துள்ளதால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் விடப்படுகிறது. இதேபோல், இப்பகுதி பொதுமக்கள் குப்பை கொட்டும் இடமாகவும் நிலையூர் கால்வாயை மாற்றிவிட்டனர்.
இந்நிலையில், தற்போது கால்வாய் முழுவதும் செடிகள், கோரை புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், கால்வாய் வழியாக தண்ணீர் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், வைகையிலிருந்து வரும் உபரி நீர் மற்றும் மழைநீர் பானாங்குளம் கண்மாய், நிலையூர் கண்மாயை அடைய முடியாத நிலை காணப்படுகிறது.
இந்த தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயமும் உள்ளது. எனவே, பொதுப்பணித் துறையினர் கால்வாயை சீரமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.