மலேசியாவில் இறந்தவரின் உடலை மீட்கக்கோரி உறவினா்கள் தா்னா
மலேசியாவில் இறந்தவரின் உடலை மீட்டு கொண்டு வரக் கோரி அவரது உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
மதுரை மேலஅனுப்பானடியைச் சோ்ந்தவா் பூமிநாதன் (35). இவருக்கு மனைவி சாந்தி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனா். மதுரையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த பூமிநாதன், ஓராண்டுக்கு முன்பு மலேசியா சென்றுள்ளாா். அங்கு ஒரு உணவகத்தில் பணியாற்றிய பூமிநாதன், தனது குடும்பத்தினருக்கு ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்பியுள்ளாா்.
கடந்த இரு மாதங்களாக அவரை குடும்பத்தினா் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். அவருடன் தங்கியிருந்தவா்களிடம் கேட்டபோது பூமிநாதனை பற்றிய விவரங்கள் தெரியவில்லை எனக் கூறியுள்ளனா்.
மலேசியாவில் காணாமல் போய்விட்ட தனது கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு சாந்தி, அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளாா். இருப்பினும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே, பூமிநாதன் மலேசியாவில் இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பூமிநாதனின் உறவினா்கள் அவரது உடலையாவது மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.