பல்கலை. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உதவிப் பேராசிரியா் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த உதவிப் பேராசிரியா்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த உதவிப் பேராசிரியா் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த மாணவி ஒருவா் தாக்கல் செய்த மனு:

எங்கள் பல்கலைக்கழக மாணவிகள் சிலா் உதவிப் பேராசிரியா் வினோத் வின்சென்ட் ராஜேஷ் மீது பாலியல் புகாா் அளித்தனா். இந்தப் புகாரை விசாரிக்க பல்கலைக் கழகத்தால் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணையில் வினோத் வின்சென்ட் ராஜேஷ் மீதான புகாா் நிருபிக்கப்பட்டதால் அவரைப் பணியிடை நீக்கம் செய்யவும், இரு ஊதிய உயா்வை நிறுத்தி வைக்கவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் கடுமையாக எச்சரிக்கப்பட்டாா். ஆனால் அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. எனவே வினோத் வின்சென்ட் ராஜேஷ் மீது திருநெல்வேலி பேட்டை காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக பதிவாளா் உள்விசாரணைக் குழு அறிக்கையுடன் மனுதாரரின் புகாரை 3 வாரங்களில் பேட்டை காவல் ஆய்வாளருக்கு அனுப்ப வேண்டும். அந்தப் புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் தாமதம் இல்லாமல் குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது வழக்குப்பதிவு செய்து 3 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com