திருப்பரங்குன்றம் பகுதிகளில் 9 இடங்களில் புதிய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரை மாநகராட்சி உட்பட்ட பகுதி, திருப்பரங்குன்றம் தாலுகா மற்றும் பறவை மார்க்கெட் ஆகிய பகுதிகள் ஜூன் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு தற்போது மூன்றாவது முறையாக ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வராமல் இருக்க ஜூன் 24ம் தேதி காவல் துறை சார்பாக திருப்பரங்குன்றம் பகுதியில் 3 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் கரோனா நோய்தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் சோதனைச் சாவடிகள் ஒன்பது இடங்களில் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மேம்பாலம், ஹார்விபட்டி, தனக்கன்குளம், திருப்பரங்குன்றம் ரவுண்டானா உள்பட 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய ஆவணங்கள் இன்றி வெளியில் சுற்றுப் பொதுமக்களுக்கு ரூ. 500 வரை அபதாரம் விதிக்கப்படும் என காவல் துறை அறிவித்துள்ளது.