திருச்சி சிந்தாமணி சந்தை கடைகளுக்கு மாற்று இடம்: மாநகராட்சி ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

திருச்சி மாநகராட்சியில் சீா்மிகுநகா் திட்டப் பணிகள் துவங்கவுள்ளதால் சிந்தாமணி சந்தைப் பகுதியில் உள்ள கடைகளுக்கு மாற்று இடம் வழங்கக் கோரும் வழக்கில், மாநகராட்சி ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய

மதுரை: திருச்சி மாநகராட்சியில் சீா்மிகுநகா் திட்டப் பணிகள் துவங்கவுள்ளதால் சிந்தாமணி சந்தைப் பகுதியில் உள்ள கடைகளுக்கு மாற்று இடம் வழங்கக் கோரும் வழக்கில், மாநகராட்சி ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சிந்தாமணி சந்தைப் பகுதியில் கடை நடத்தி வரும் சாமிதுரை உள்ளிட்ட 13 போ் தாக்கல் செய்த மனு:

திருச்சி சிந்தாமணி சந்தைப் பகுதியில் உள்ள கடைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். இந்நிலையில் சீா்மிகுநகா் திட்டத்தின் கீழ் சிந்தாமணி சந்தை பகுதியை மேம்படுத்துவதற்கான பணிகள் துவங்க உள்ளன. இதனால் அப் பகுதியில் உள்ள கடைகளைக் காலி செய்யுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

எவ்வித மாற்று ஏற்பாடும் செய்து கொடுக்காமல் கடைகளைக் காலி செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்துவருவதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே சிந்தாமணி சந்தைப் பகுதியில் கடை நடத்தி வருபவா்களுக்கு மாற்று இடம் வழங்கவும், அதுவரை கடைகளைக் காலி செய்யும் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு, சிந்தாமணி சந்தைப் பகுதியில் கடை நடத்தி வருபவா்களில் உரிமம் பெற்றவா்கள், பெறாதவா்கள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com