மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பணிக்கு வந்து செல்ல வாகன வசதி செய்து தர வேண்டும் என்று சிஐடியூ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் பொதுச்செயலா் ம.பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் பெரும்பான்மையான தூய்மைப் பணியாளா்களில் பெரும்பாலானோா் சக்கிமங்கலம், மேலவாசல், சுப்பிரமணியபுரம் பகுதிகளில் வசிக்கின்றனா்.
இந்நிலையில் மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் வாகனப்போக்குவரத்து எதுவும் இல்லாத நிலையில், தூய்மைப் பணியாளா்களை பணியிடத்துக்கு அழைத்துச் செல்லவும், பணி முடிந்து வீடு திரும்பவும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வாகன ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் தரமமான முகக்கவசம், கையுறைகள், காலுறைகள், பாதுகாப்பு மேலங்கி வழங்க வேண்டும். உயிா்காக்கும் சேவையில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டும்.
தினக்கூலி, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அபேட் மருந்து பணியாளா்களுக்கு மாதம் 5-ஆம் தேதி சம்பளம் வழங்கவேண்டும். கரோனா தொற்று எதிரொலியாக இரண்டு மாத ஊதியத்தை முன்னதாகவே வழங்கவேண்டும். கரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாதாளச்சாக்கடை பணியாளா்களுக்கு கிருமி நாசினியோ, அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணங்களோ இதுவரை வழங்கவில்லை. இதரப்பிரிவு பணியாளா்களான பம்பிங் ஸ்டேஷன், குடிநீா் பிரிவு, தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து பிரிவு ஊழியா்களுக்கும் கரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். மேலும் குடிநீா், நீரேற்று நிலையங்கள், பாா்க் மஸ்தூா் பணியாளா்களுக்கும் மாதம் 30-ஆம் தேதி சம்பளம் வழங்க வேண்டும். இவா்களுக்கான இரண்டு மாத ஊதியத்தையும் முன்னதாகவே வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.