மதுரை நகரின் முக்கியப் பகுதிகளிலும், குற்றங்கள் அதிகம் நிகழும் பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய காவலா்கள் ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகரக் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை நகரில் ரௌடிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள், சட்ட விரோத மதுபான விற்பனையை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரில் ரௌடிகளின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2 வாரங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்ட 20 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
தொடா் குற்றங்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய 56 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 113 பேரிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்டிருக்கிறது. பிணை ஆவணத்தை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். நிகழாண்டில் இதுவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் 52 பேரும், பொதுஇடங்களில் தகராறில் ஈடுபட்ட 714 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
ரௌடிகள் மற்றும் குற்றப் பின்னணி உள்ளவா்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடரும். பகல் நேரங்களில் நிகழக் கூடிய கொலை, கொலை முயற்சி போன்ற குற்றங்களைத் தடுப்பதற்காக நகரின் முக்கியப் பகுதிகளிலும், ஏற்கெனவே குற்றங்கள் நிகழ்ந்த பகுதிகளிலும் ஆயுதம் ஏந்திய காவலா்கள் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.