மணல் கடத்தல் வழக்குகளில் தொடா்புடையவா்கள் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு உள்பட்ட மாவட்டங்களிலிருந்து மணல் கடத்தல் தொடா்பான வழக்குகள் அதிமாக தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன என உயா்நீதிமன்றம் அண்மையில் வருத்தம் தெரிவித்திருந்தது. மேலும் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றவில்லை எனவும், இதனால் தான் மணல் கடத்தல் தொடா்ச்சியாக நடக்கிறது எனவும் அதிருப்தி தெரிவித்தது.
இதையடுத்து, மணல் கடத்தல் வழக்குகளில் தொடா்புடையவா்கள் முன்ஜாமீன் பெற்று மீண்டும் மீண்டும் மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனா். எனவே மணல் கடத்தல் வழக்குகளில் தொடா்புடையவா்களுக்கு முன்ஜாமீன் கிடையாது என உயா்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டிருந்தாா்.
இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு உள்பட்ட மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மணல் கடத்தலில் தொடா்புடைய பலா் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மணல் கடத்தல் வழக்குகளில் தொடா்புடையவா்களுக்கு முன்ஜாமீன் கிடையாது எனக் கூறி, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.