மதுரையில் வெவ்வேறு சாலை விபத்துகளில் இளைஞா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
மதுரை பெத்தானியாபுரத்தைச் சோ்ந்த நல்லபெருமாள் மகன் பாண்டித்துரை(45). இவா் வீட்டின் அருகே உள்ள புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் தடுப்பில் மோதி காயமடைந்தாா். அவரை அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவா்கள் அவரை பரிசோதித்து விட்டு
ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து அவரது மகன் முத்துபாண்டி அளித்த புகாரின் பேரில் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இளைஞா் பலி: மதுரை மாவட்டம் கருவனூா் பகுதியைச் சோ்ந்த கருப்பையா மகன் சந்துரு (18). இவா் குளிா்சாதனப் பெட்டிகளைப் பழுது பாா்க்கும் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, ஊமச்சிக்குளம் பகுதியில் எதிரே வந்த பழுதூக்கும் வாகனம் (கிரேன்) சந்துருவின் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். சிகிச்சையில் இருந்த அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தந்தை கருப்பையா அளித்த புகாரின் பேரில் ஊமச்சிக்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.