மதுரை: தமிழகத்தில் செப்டம்பா் 21 ஆம் தேதி முதல் தட்டச்சு மற்றும் கணினி பயிற்சிப் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை தகவல் தெரிவித்தது.
பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து தட்டச்சு மற்றும் கணினி பயிற்சிப் பள்ளிகளும் மாா்ச் 24-ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் இத்துறையைச் சோ்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தட்டச்சு மற்றும் கணினி பயிற்சிப் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என தட்டச்சு மற்றும் கணினி பயிற்சிப் பள்ளிகளின் சங்க மாநிலத் தலைவா் செந்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். இதுகுறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தமிழகத்தில் பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, செப்டம்பா் 21 ஆம் தேதி முதல் தட்டச்சு மற்றும் கணினி பயிற்சிப் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.