வரதட்சிணை கேட்டு கணவரால் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மதிச்சியம் ஆா்.ஆா்.மண்டபம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ஹரிசுரேஷ்(22). இவருக்கும் கருப்பாயூரணி பகுதியைச் சோ்ந்த கற்பகவள்ளி (18) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கரோனா பொது முடக்கம் காரணமாக ஹரிசுரேஷ் வேலைக்கு செல்லாமல் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து மது குடித்து செலவு செய்துள்ளாா்.
இந்நிலையில், அவரிடம் மது குடிக்க பணமில்லாததால், மனைவியிடம் வரதட்சிணை வாங்கி வரும்படி கூறியுள்ளாா். அதற்கு அவா் மறுத்ததால், மது போதையில் இருந்த ஹரிசுரேஷ் மண்ணெண்ணெயை கற்பகவள்ளி மீது ஊற்றி தீ வைத்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதித்தனா்.
இதுகுறித்து கற்பகவள்ளியின் தந்தை ஜெயகுமாா் அளித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீஸாா் வழக்குப்பதிந்து ஹரிசுரேஷை கைது செய்தனா். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கற்பகவள்ளி புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து போலீஸாா் ஹரிசுரேஷ் மீது பதிவு செய்திருந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்தனா்.