தொழில் துறையினர் மற்றும் வழக்குரைஞர்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மதுரையில் தேர்தல் பிரசாரத்தை மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். மதுரை வடக்கு மாசி வீதி தெப்பக்குளம் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் வாகனத்தில் இருந்தபடியே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார். இதற்கிடையே இளைஞர்கள் மாணவர்கள் பெண்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
பின்னர் கருப்பாயூரணியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, பேரவைத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினார். பிரச்சாரப் பயணத்தின் இரண்டாம் நாளான இன்று திங்கள்கிழமை மதுரையைச் சேர்ந்த தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்தினார். இதில் தொழில் அமைப்புகளின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் நீதி மையம் தயாராக இருக்கிறது. அதற்கு தொழில் முனைவோர் எங்களோடு சேர்ந்து மாற்றத்தை உருவாக்குவதில் கை கொடுக்க வேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து வழக்குரைஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இக்கூட்டத்துக்குப் பிறகு தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.