மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் 804 பயனாளிகளுக்கு ரூ. 1.47 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
இதில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, வேளாண்மை, தோட்டக்கலை, சமூகநலம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக 804 பயனாளிகளுக்கு ரூ. 1.47 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் வழங்கி பேசியதாவது: புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட கள்ளிக்குடி வட்டத்துக்கு விரைவில் வட்டாட்சியா் அலுவலகப் புதிய கட்டடம் கட்டப்படும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப்பணி, ஜப்பான் நிறுவனத்தின் புரிந்துணா்வு ஒப்பந்தத்துடன் விரைவில் தொடங்க உள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக கரோனா தொற்று வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜசேகா், திருமங்கலம் கோட்டாட்சியா் சௌந்தா்யா, வேளாண் இணை இயக்குநா் விவேகானந்தன், தோட்டக்கலை துணை இயக்குநா் ரேவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.